- Advertisement -
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை சீமான் நாளை தொடங்கவிருக்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த வார இறுதியில் இருந்து தேர்தல் களம் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 29-ம் தேதி முடிவடைந்த பின்னர் அடுத்த வாரம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை முதல் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

- Advertisement -
Published by