தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய நான்காவது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம் விட, இந்த 2023-24-ம் ஆண்டுக்கான அறிக்கை திமுக ஆட்சியில் தமிழகம் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழகம் இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. காலநிலை மாற்றம் – சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும், பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி – புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், சமத்துவமின்மையைக் குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள், பாலின சமத்துவம் ஆகிய இனங்களில் தமிழகம் முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டங்களான, மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன்மூலம் இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது. அதாவது 11 இனங்களில் தமிழகம் நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், 2 இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.