Homeதமிழ்நாடுஇனி விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம்.

இனி விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விபத்து வழக்குகளின்போது ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியிருந்த நிலையில், சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று காயமடைந்த ரமேஷ் என்பவர் இழப்பீடு கோரி இருந்தார். ஆனால், விபத்து நடந்தபோது ரமேஷ் மீது மது வாசனை வீசியதாகவும், லாரியில் இருந்து அவர் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவில்லை என்றும் கூறி 50% இழப்பீடு மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை எதிர்த்து ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, “மது வாசனை வீசியதாக கூறிய போதிலும், அதன் அளவை குறிப்பிடவில்லை. ஓட்டுநரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியிருந்தால் மட்டுமே கவனக்குறைவாக இருக்க முடியும்.” என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், பல சமயங்களில் வாகன விபத்துகளில் சிக்கி மருத்துவமனை அழைத்து வரப்படும் நபர்களுக்கு இரத்தத்தில் ஆல்கஹால் அளவை மருத்துவர்கள் பரிசோதிக்கத் தவறுவதாகத் தெரிவித்த நீதிபதி, இதனால் விபத்தில் காயமடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது எனத் தெரிவித்தார்.

எனவே, மோட்டார் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனை அழைத்து வரப்படும் நபர்கள் மீது மதுவாசம் வீசினால், அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவைப் பரிசோதிக்கவும், அதனை விபத்து அறிக்கைகளில் பதிவு செய்யவும் தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கையை வெளியிடுமாறு சுகாதாரத் துறை செயலாளருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் தான் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதால், ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சற்று முன்