Microsoft windows 10 issue | மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் : உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ப்லவேறு சேவைகள் முடங்கியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் விண்டோஸில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறால் ஐடி ஊழியர்கள் முதல் விமானத்தில் பயணம் செய்யும் பயனிகள் வரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாஃப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பாலான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்த பயனர்களின் கணினி அல்லது லேப்டாப்களில் “ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்” என காட்டுவதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு
மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள், தங்களின் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவித்துள்ளன. குறிப்பாக சென்னையில் நண்பகல் முதல் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் கையால் எழுதப்பட்டு போர்டிங் பாஸ் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையங்களில் உள்ள டிஸ்பிளே திரைகள் மற்றும் செக் இன் திரைகள் உள்ளிட்டவையும் இதனால் பாதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கோளாறு குறித்து ஆலோசனை நடத்திய அதிகாரிகள், கோளாறுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
விண்டோஸ் கோளாறு குறித்து மைக்ரோசாஃப்ட் விளக்கம்
இந்த கோளாறு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என குறிப்பிட்டுள்ளது.