இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இன்று உலகளவில் புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது மிகையாகாது. இளம் வயதிலேயே தந்தையை இழந்த கோலி, பல தருணங்களில் தன் தந்தையை பற்றி உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். தன் தந்தையால் கொடுக்கப்பட்ட புனித கயிறு ஒன்றை அவர் எப்போதும் தன்னுடைன் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
கோலியின் தந்தை பிரேம் கோலி 2006 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அப்போது ரஞ்சி கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்த கோலி, தன்னுடைய தனிப்பட்ட இழப்பையும் பொருட்படுத்தாது அடுத்த நாளில், ரஞ்சி டிராபியில் அணிக்காக பேட்டிங் செய்தார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிவார்கள்.
அப்போது கோலியோடு அணியில் இருந்த இஷாந்த் சர்மா கோலியின் தந்தை காலமானது தனக்கு தெரிய வந்தது குறித்து சமீபத்தில் ரன்வீர் அலபாடியாவின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் “கோலி அழுவதை நான் எப்போதும் பார்த்ததில்லை. ஆனால் அவரது தந்தை இறந்தபோது அவர் மிகவும் சோகமாக இருந்தார்.
நாங்கள் கர்நாடகாவுக்கு எதிராக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். எப்பொழுதும் அவர் தான் என்னை பிக்அப் செய்துகொள்வார். நாங்கள் படேல் நகரிலிருந்து பெரோஸ்ஷா கோட்லாவுக்குச் செல்வோம். அன்று அவர் மிகவும் சோகமாக இருந்தார். கோலியோடு அப்போது ஒரு வீடியோ ஆய்வாளரும் இருந்தார்.
நான் கோலியிடம் ஏன் சோகமாக இருக்கிறாய் எனக் கேட்டேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. நான் விளையாட்டாக அவர் தலையில் தட்டினேன். அப்போது அவர் கூட இருந்தவர், அவரின் தந்தை இறந்துவிட்டார் எனக் கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை.
எங்களுக்கு அப்பொழுது 17 வயதுதான். இவ்வளவு நடந்தும் அவர் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். எனக்கு ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருந்தால், நான் மைதானத்திற்குச் சென்றிருக்க கூட மாட்டேன் என்று நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார் இஷாந்த் ஷர்மா.