கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இந்நிலையில் 10 ஆண்டுகால காத்திருப்பை முடித்து வைக்க இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடக்க உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கடந்த முறை கோலி தலைமையில அரையிறுதி வரை சென்றது இந்திய அணி. இந்த முறை ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக உலகக் கோப்பை பற்றிய பரபரப்பு அதிகமாகியுள்ள நிலையில் சுவாரஸ்ய நிகழ்வாக உலகக் கோப்பை டிராபி பூமியில் இருந்து 1.2 லட்சம் அடி தொலைவில் விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரை விளம்பரப் படுத்த இந்த வித்தியாச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் பல மாதங்களாக இந்திய ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த உலகக் கோப்பை அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற அதில் சேவாக் மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
உலகக் கோப்பை அட்டவணையை பொறுத்தவரை இந்திய அணி தங்கள் முதல் போட்டியை சென்னையில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணியில் மூத்த வீரரும் முன்னாள் வீரருமான கோலி, தனது நான்காவது உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் 23 வயது இளம் வீரராக அவர் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவருக்காக இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்ல முயல வேண்டும் என விரேந்திர சேவாக் கூறியுள்ளார். அவரின் பிறந்தநாளான நவம்பர் 5 ஆம் தேதி இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான நாளாக அமைய வாய்ப்புள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.