டி 20 உலக கோப்பைத் தொடர் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், இன்னொரு பக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் கிரிக்கெட் தொடர்களும் ஆடி வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க மகளிர் அணி ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் ஆட உள்ளது.
இதில் முதலாவதாக தற்போது ஒரு நாள் தொடர் ஆரம்பமாகி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 55 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி இருந்தது. செஃபாலி வர்மா 7 ரன்னிலும், ஹேமலதா 12 ரன்னிலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களிலும் நடையை கட்ட தொடக்க வீரர் ஸ்ம்ரிதி மந்தனா மட்டும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தபடி இருந்தார்.
அவருக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்திரக்கர் ஆகியோர் உதவி செய்ததால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருந்தது. அது மட்டுமில்லாமல், தொடக்க வீரராக இறங்கி அணியின் ரன்னை ஏற்றுவதற்காக போராடிய ஸ்ம்ரிதி மந்தனா 127 பந்துகளில் 111 அடித்து அசத்தி இருந்தார்.
அவரது உதவியால் இந்திய அணியும் நல்ல ஸ்கோரை எட்ட, தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 38 வது ஓவரில் ஆல் அவுட்டான அவர்கள் 122 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தரப்பில் ஆசா ஷோபனா நான்கு விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். மேலும் இந்த போட்டியில் சதமடித்த ஸ்ம்ரிதி மந்தனா, ஆட்டநாயகன் விருது வென்றிருந்த நிலையில் சில முக்கியமான சாதனைகளையும் தற்போது படைத்துள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக ரன் அடித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை மிதாலி ராஜ் பெற்றிருந்தார். அவரது 109 ரன்களை தற்போது கடந்தும் 117 ரன்கள் சேர்த்த மந்தனா, அந்த சாதனையை சொந்தமாக்கி உள்ளார். இதேபோல ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். முதல் இடத்தில் மிதாலி ராஜ் ஏழு சதங்களுடன் இருக்க, வந்தனா தற்போது 6 சதங்களை எட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் போட்டியில் 7000 ரன்களை அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் ஸ்ம்ரிதி மந்தனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்திய ஆடவர் அணியில் விக்கெட்டுகள் இழந்து அவர்கள் தடுமாறும் போது விராட் கோலி ஆபத்பாந்தவனாக நின்று தனியாளாக ரன் சேர்ப்பார். அவரது ஜெர்சி நம்பரான 18-ஐ அணிந்துள்ள ஸ்ம்ரிதி மந்தனாவும் அப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.