இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 8வது முறையாக உலகோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது வெற்றியை பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தேர்வு பெற அதிகப்படியாக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் பந்து வீச்சானது ஆரம்பத்தில் சற்று அப்படி இப்படி இருந்தாலும் போக போக அருமையாக இருந்தது என்றே கூற வேண்டும். பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை தொடந்தது பேட்டிங் ஆட களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார்.
மறுபுறம் கில்லும் விரைவாக ரன்களை சேர்த்தார். எனினும் அவர் 16 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கோலியும் 16 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த ஷ்ரேயஸ் ஐயர் ரோகித் சர்மாவோடு பார்ட்னெர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க துவங்கினார்.
ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் 63 பந்துகளில் 86 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் 6 போர்களும் 6 சிக்ஸர்களும் அடக்கம். தொடர்ந்து விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அரை சதம் அடித்தார். இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.
போட்டிக்கு பிறகு இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறுகையில், “நாங்கள் சிறப்பாக தான் துவங்கினோம். நானும் இமாமும் நல்ல ஒரு பார்ட்னெர்ஷிப் அமைத்தோம். நானும் ரிஸ்வானும் சாதாரணமாக விளையாட நினைத்தோம். ஆனால் திடீரென்று மிகப்பெரிய சரி ஏற்பட்டது. எங்களால் சரியாக ரன்களை குவிக்க முடியவில்லை.
நாங்கள் ஆரமித்ததை பார்க்கும்போது எப்படியும் 280 முதல் 290 ரன்கள் அடிப்போம் என்று எண்ணினோம். பவுலிங்கை பொறுத்தவரை புதிய பந்தில் எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. ரோகித் சர்மா இன்று மிக சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறியுள்ளார் பாபர் ஆசாம்.