- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன்ன மொத்தமா ஏமாத்திட்டாங்க.. அவரு ஒருத்தர் தான் என்கிட்ட பேசுனதே.. ஹனுமா விஹாரி ஏக்கம்..

என்ன மொத்தமா ஏமாத்திட்டாங்க.. அவரு ஒருத்தர் தான் என்கிட்ட பேசுனதே.. ஹனுமா விஹாரி ஏக்கம்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலமாகவே இளம் வீரர்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஐபிஎல் தொடர், டி 20 லீக் தொடர்கள் உள்ளிட்டவற்றில் அதிகமாக இளம் வீரர்கள் ஆடி வருவதால், பல இளம் வீரர்கள் இந்திய அணியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் என பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்து சர்வதேச இந்திய அணிக்காக ஆட தேர்வானவர்கள் தான்.

இவர்களை போன்று இன்னும் ஏராளமான இளம் வீரர்கள், முதல் தர போட்டிகளில் தங்களின் திறனை நிரூபித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி விட்டனர். இதனால் துடிப்பான இளம் வீரர்களுடன் இந்திய அணி பல தொடர்களையும் எதிர்பாராத விதமாக வென்று தான் வருகிறது.

ஆனால் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்று வருவதன் காரணமாக சில பிரச்சனைகளும் உருவாகாமல் இல்லை. இவர்களின் அனுபவம் குறைவு என்பதால் நெருக்கடி நிறைந்த சூழல் வரும் போது அதனை சிறப்பாக கையாள முடியாமல், தங்களின் திறனை நிரூபிக்கவும் ஒரு சில போட்டிகளில் அவர்கள் தவறி விடுகின்றனர்.

இதே போல, மற்றொரு பெரிய பிரச்சனையும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து விமர்சனத்தை சந்தித்து வருகிறது. டெஸ்ட் போட்டியிலும் அதிகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதால் ரஹானே, புஜாரா உள்ளிட்ட தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

முன்னதாக, குறைந்த ஓவர் போட்டிகளில் கில், இஷான் கிஷன் உள்ளிட்டோர் வருகையால் ஷிகர் தவானின் வாய்ப்பும் கூட மங்கிப் போனது. இவர்களை போல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த போதிலும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருபவர் தான் ஹனுமா விஹாரி.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்று ஆடி வந்த ஹனுமா விஹாரி, பல போட்டிகளில் இந்திய அணிக்கு உருவாகும் நெருக்கடியை தனியாளாக சமாளித்து கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அவருக்கான வாய்ப்புகள் கிடைப்பது குறைந்து போய் விட்டது.

இது பற்றி சமீபத்தில் பேசிய ஹனுமா விஹாரி, “இந்திய டெஸ்ட் அணியில் நான் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமாகவும், வேதனையாகவும் தான் உள்ளது. ஆனால் அனைவரின் வாழ்விலும், ஏற்றமும் இறக்கமும் இருக்கும். தற்போது ரஞ்சித் தொடரில் ரன் குவிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன். இதில் நிறைய ரன்கள் அடித்து இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

அதே போல, இந்திய அணி சார்பில் யாராவது பேசினார்களா என்பது பற்றி பேசிய ஹனுமா விஹாரி, “யாருமே என்னிடம் சமீப காலமாக பேசவில்லை. ஆனால் ராகுல் டிராவிட் மட்டும் கடைசி போட்டிக்கு பிறகு நான் எதில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது பற்றி தெரிவித்திருந்தார். அதன் பின்னர் நான் யாரிடமும் பேசவில்லை.

நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனது கிரிக்கெட் பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங் செய்யும்போது சிறந்த பங்களிப்பை அளிக்க முயல்கிறேன். அதன் பின்பு என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்