சமந்தா தற்போது தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். சென்னையை சேர்ந்த சமந்தா, முதன்முதலில் “ஏ மாயா சேஸவா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தமிழில், “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த சமந்தா, தென்னிந்தியாவின் மிகப்பெரிய புகழ் பெற்ற நடிகராக வளர்ந்தார். சமீப காலமாக மையோசிட்டிஸ் என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா. எனினும் தனது நோயை மிகவும் தைரியமாக எதிர்கொண்டு வருவதாக பல பேட்டிகளில் மிகவும் தன்னம்பிக்கையோடு கூறி வருகிறார்.
சமந்தா சமீபத்தில் “சகுந்தலம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “குஷி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா தற்போது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.
“சென்னை ஸ்டோரி” என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை பிலிப் ஜான் என்ற ஹாலிவுட் இயக்குனர் இயக்கி வருகிறார். டைமரி என்.முராரி என்பவர் எழுதிய “தி அர்ரேஞ்சமண்ட்ஸ் ஆஃப் லவ்” என்ற பிரபலமான நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தில் விவேக் கல்ரா என்ற ஆங்கில நடிகர் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதாவது இங்கிலாந்தில் வசித்து வரும் ஹீரோ, தனது தாயாரின் மரணத்திற்கு பிறகு தனது மூதாதையர்களை பார்க்கவும் தாயாரிடம் இருந்து பிரிந்துபோன தனது தந்தையை கண்டுபிடிக்கவும் சென்னை வருகிறாராம். அப்போது எதிர்பாரா விதமாக சமந்தாவை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. அதன் பின் ஹீரோவின் தந்தையை கண்டுபிடிக்க சமந்தா உதவுகிறார். இருவரும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதுதான் “சென்னை ஸ்டோரி” திரைப்படத்தின் கதை என கூறப்படுகிறது.