இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடருக்கு இடையே டிஆர்எஸ் முறையில் நடந்த சில முடிவுகளும், அதே வேளையில் அம்பயர்ஸ் கால் மூலம் மாறிய விக்கெட்டுகளின் முடிவுகளும் இரு அணிகளில் உள்ள வீரர்களையும் கடும் விரக்திக்கு ஆளாக்கி இருந்தது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அம்பயர்ஸ் கால் மூலம் அணியின் விக்கெட்டுகள் சில விழுந்த சமயத்தில், டெக்னாலஜியில் சில பிழைகள் இருப்பதாகவும், அம்பயர்ஸ் கால் முறை மாற வேண்டும் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
அதே வேளையில் இந்த டெஸ்டிலேயே இங்கிலாந்து அணிக்கு சாதகமாகவும் ஒரு அம்பயர்ஸ் கால் முடிவு வந்திருந்தது. இது பற்றி ரசிகர்கள் கூட இப்போது பேசுங்கள் என்றும் பென் ஸ்டோக்ஸை குறிப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.
ஜெய்ஸ்வால் அரைசதமடித்து அவுட்டாக, ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
இந்த முறையும், இந்திய அணியின் பக்கம் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக முதல் நாளிலேயே தெரிகிறது. அப்படி ஒரு சூழலில், இளம் வீரர் பேச்சை கேட்காமல் ரோஹித் தனியாக முடிவு எடுத்ததால் இந்திய அணிக்கு நடந்த சம்பவம் ஒன்றை பற்றி தற்போது காணலாம். இங்கிலாந்து அணி வீரர் சாக் கிராவ்லி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, குல்தீப் யாதவ் பந்து வீசி இருந்தார்.
அப்போது அந்த பந்து, கிராவ்லி பேட்டின் விளிம்பில் பட்டு கீப்பர் ஜூரேல் கிளவுஸில் பட்டு ஷார்ட் லெக் ஃபீல்டரான சர்ப்ராஸ் கான் கையில் கேட்சாக மாறி இருந்தது. இதற்கு இந்திய வீரர்கள் அவுட்டிற்கு அப்பீல் செய்தும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
பேட்டில் பட்டதில் சர்பராஸ் கான் உறுதியாக இருந்த நிலையில், ரோஹித் சர்மா மற்ற வீரர்களுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு பேட்டில் படவில்லை என டிஆர்எஸ் அப்பீல் செய்யும் மறுத்துவிட்டார். ஆனால் இதன் ரீப்ளேயில் பேட்டில் பந்து பட்டது தெரிய வர, சர்ப்ராஸ் கான் விரக்தி அடைந்ததாக தெரிகிறது.
ஒருவேளை அப்போதே சர்பராஸ் கான் பேச்சை கேட்டு ரோஹித் டிஆர்எஸ் அப்பீல் செய்திருந்தால், 79 ரன்கள் எடுத்த கிராவ்லி குறைந்த ரன்னில் அவுட்டாகி இங்கிலாந்து அணியை இன்னும் குறைந்த ரன்னில் சுருட்டவும் இந்திய அணிக்கு வாய்ப்பு உருவாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.